பாரதியார் பாடல்கள்

வந்தே மாதரம்


தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு( ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-ஆதி)

பல்லவி

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)

சரணங்கள்
1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

- ஆசிரியர் :*


1/19